சென்னை: செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கம், பாரதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ராஜேஷ் கண்ணா (23). இவர், சரக்கு வாகனம் வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தனது வீட்டின் அருகே பிரமாண்ட விநாயகர் சிலை வைத்து ராஜேஷ்கண்ணா மற்றும் அவரது நண்பர்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு விநாயகர் சிலையை ராஜேஷ்கண்ணா, அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25), மோகன்ராஜ் (25) ஆகிய 3 பேரும் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 1.30 மணியளவில் அப்பகுதியில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் வந்திறங்கியது. பின்னர், அனைவரும் ஓடிவந்து, விநாயகர் சிலைக்கு அருகே பாதுகாப்பு பணியில் இருந்த ராஜேஷ்கண்ணாவை சுற்றி வளைத்து, வீச்சரிவாள் மற்றும் கத்தியால் சரமாரி வெட்டினர். மேலும், அவர்களை தடுக்க வந்த கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய இருவரையும் சரமாரி வெட்டினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இவர்களைப்பார்த்த அம்மர்ம கும்பல் அங்கிருந்து காரில் ஏறி கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றது. இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில், மயங்கி கிடந்த ராஜேஷ்கண்ணா, கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய 3 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே ராஜேஷ்கண்ணா உயிரிழந்ததாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த மற்ற 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்புகாரின்பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன் பாரதபுரம் பகுதியில் ராஜேஷ்கண்ணா, கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய 3 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது தகராறில் நீயா, நானா போட்டியில் அக்கும்பல் முந்திக்கொண்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு விநாயகர் சிலை காவலுக்கு இருந்த ராஜேஷ்கண்ணாவை சரமாரி வெட்டி படுகொலை செய்துள்ளது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தினர். மேலும், செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின்பேரில், வாலிபரை வெட்டி கொலை செய்த 10 பேர் கொண்ட மர்ம கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், தாலுகா போலீசார், இக்கொலையில் முக்கிய குற்றவாளிகளான செங்கல்பட்டு அடுத்த வல்லம் கூட்ரோடு பகுதியைச்சேர்ந்த நாகராஜ் (40), அஜித் (25), ரமேஷ் (30), ஜீவா (20), லோகேஷ் (23), ராஜேஷ் (25) மற்றும் பார்த்திபன் (35) உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….