செங்கம்: செங்கம் பகுதியில் உள்ள வரதன்தாங்கல் ஏரி நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கம் டவுன் துக்காப்பேட்டை பகுதியில் வரதன்தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை நம்பி சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.இந்நிலையில், விவசாய பணிகளுக்காகவும், அணையின் பாதுகாப்பு கருதியும் செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டபோதும் வரதன்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. பருவமழை பெய்த காலங்களிலும் இந்த ஏரி மட்டும் நிரம்பி கோடி போனதாக தெரியவில்லை.முறையாக பராமரிக்காமல் கால்வாய்கள் தூர்ந்துபோய் உள்ளதாலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும், ஒருநாள் மழைக்குகூட நிரம்பிவிடும் வரதன்தாங்கல் ஏரி நீரின்றி வறண்டு காணப்படுகிறது.இதுதவிர, அங்கு கொட்டப்படும் குப்பைக்கழிவுகள், தேங்கிக் கிடக்கும் கழிவுநீர், ஆக்கிரமிப்புகள் என பல்வேறு பிரச்னைகள் உள்ளதால் ஏரியானது மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா, ஏரியானது நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஆட்சியின்போது தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தில் ஏரிகள் தூர்வாரி சீரமைத்தபோதுகூட வரதன்தாங்கல் ஏரியை மட்டும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வரதன்தாங்கல் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும். அதேபோல், ஏரி நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
செங்கம் துக்காப்பேட்டையில் தூர்ந்துபோன கால்வாய்களால் வறண்டு கிடக்கும் வரதன்தாங்கல் ஏரி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
previous post