சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இறுதி விசாரணை ஜூன் 28ம் தேதி தொடங்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையை திருப்பி செலுத்தாததால் நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 15 கோடி ரூபாயை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதிசெய்திருந்தது.இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, லைகாவிற்கும் விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு பதிலளித்த லைகா நிறுவனம் தரப்பு வழக்கறிஞர் ஹேமா னிவாசன், சமரசத்திற்கு தயார் என்று விஷால் தரப்பு கூறினாலும் ஆக்கப்பூர்வமாக எதையும் முன்னெடுக்கவில்லை என்றார். இதையடுத்து, இறுதி விசாரணைக்காக வழக்கை ஜூன் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.