மதுரை, ஆக. 1: திருமங்கலம் ஒன்றியம் கொக்குளம் பகுதியில் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கொக்குளம் பகுதியில், ரூ.2 கோடி மதிப்பீட்டில் மின்மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள மயானத்திலேயே புதிதாக மின் மயானம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மின்மயானம் வந்தால் தங்களது பகுதி பாதிக்கப்படும் எனவும், சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி, இந்த திட்டத்தினை வேறு பகுதியில் நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில், நேற்று கொக்குளம், கிண்ணிமங்கலம், தேன்கல்பட்டி, பாரைபட்டி, சிக்கம்பட்டி, புளியங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் இணைந்து மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் மின்மயானம் அமைப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையெனில் எங்களின் போராட்டம் தொடரும்’ என்றனர்.