மதுரை, ஆக. 1: மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அடகுக்கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக, அதே பகுதியை சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை ஒத்தக்கடை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி இந்திரா அடகு கடை நடத்தி வருகிறார். இவரை, இதே பகுதியை சேர்ந்த சுரேஷ்பாண்டி, சிவா ஆகியோர் நேரில் சந்தித்து, ஏற்கனவே வேறு ஒரு கடையில் நகையை அடகு வைத்திருப்பதாகவும், அதனை மீட்டு, விற்பனை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளனர். பின்னர், அந்த நகையை மீட்க, ரூ.6 லட்சத்து 6 ஆயிரம் தரும்படி கேட்டுள்ளனர்.
இதனை நம்பிய இந்திரா, அவர்கள் கேட்ட பணத்தை, கடந்த 24ம் தேதி, வங்கி மூலம் டிரான்ஸ்பர் செய்துள்ளனர். இந்தப் பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் இருவரும், ஏற்கனவே அடகு வைத்திருந்த நகையை மீட்டு விற்பனை செய்யாமல் இந்திராவை ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திரா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். இந்தப்புகாரின் பேரில் போலீசார் நகையை மீட்டு விற்பனை செய்வதாகக்கூறி, ரூ.6 லட்சத்தை மோசடி செய்ததாக சுரேஷ்பாண்டி, சிவா ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.