சூலூர், மார்ச் 27: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பட்டணம் பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல வந்த தனியார் பள்ளி பேருந்து அந்த வழியில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். கோவை மாவட்டம் சூலூர் நீலாம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் வேன் ஒன்று பட்டணம் பகுதியில் 6 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, பட்டணம் ஜேஜே நகர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடும்போது பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த நீரோடையில் தலைகுப்புரர கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் இருந்த குழந்தைகள் அழுது துடித்தனர். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து குழந்தைகளை காப்பாற்றி வெளியே எடுத்து வந்தனர். இதில் 6ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 5 சிறுவர் சிறுமிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி பேருந்து இயக்கி வந்த கார்த்தி 30) என்பவர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். காயமடைந்த குழந்தைகளை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து பள்ளி வேனை கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.