புதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு விவகாரத்தில் திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் 2022-23ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த ஒன்றிய அரசு, இந்த ஆண்டுக்கான தேர்வு பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் நடைபெறும் என தெரிவித்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வின் பாடத்திட்டத்தில் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாணவர்கள் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக 41 முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்த மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ஒன்றிய அரசு, பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதை திரும்பப்பெற முடியாது எனவும், இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்த இருந்த தேர்வானது ஒத்திவைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தது. இதற்கு உச்ச நீதிமன்றம், ‘‘கடந்த 2018ம் ஆண்டு முதல் இருக்கும் மருத்துவ படிப்பின் பாடத்திட்டத்தை இவ்வளவு அவசரமாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? மருத்துவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்ளாத புதிய பாடத்திட்டத்தை எப்படி ஏற்க முடியும்?’’ என ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பட்டி, ‘‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு விவகாரத்தில் மாணவர்களுக்கான அறிவிப்புடன் தான் பாடத்திட்ட மாற்றம் செய்திருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். அதனால் திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் என்பது வரும் 2022-23ம் கல்வியாண்டில் இருந்து தான் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான தேர்வு வரும் ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறும் தேர்வின் போது தற்போது இருக்கும் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும்’’ என புதுத்தகவலை தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் 2022-23ம் கல்வியாண்டில் இருந்து தான் நடைமுறைப் படுத்தப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதேபோன்று இதில் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வு வாரியத்துடன் இணைந்து ஒன்றிய அரசு கலந்து ஆலோசித்து இத்தகைய முடிவை மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது மாணவர்கள் மத்தியில் இருந்த அதிருப்தியையும் நீக்கியுள்ளது’’ எனக் கூறி, இதுதொடர்பாக மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சட்டப்பிரிவு 32ன் கீழ் முடித்து வைப்பதாகவும், இருப்பினும் இந்த விவகாரத்தை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டனர். இதையடுத்து வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றமில்லை என உறுதியாகியுள்ளது….