ஆரணி, டிச.2: ஆரணியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய ட்ரைபுட் பாக்கெட்டில் உயிருடன் பூச்சி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்ைக எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரணி டவுன் ஷரப்பஜார் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(34), செல்போன் கடையில் வேலை செய்கிறார். இவர் நேற்று முன்தினம் ஆரணி அடுத்த மாங்காமரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் ட்ரைபுட்டான முந்திரி, திராட்சை, பாதாம், பேரிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு கவுன்டரில் பில் போட்டார். அப்போது, ட்ரைபுட் பாக்கெட்டில் உயிருடன் ஒரு பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அதை ஊழியர்களிடம் காண்பித்துள்ளார். அதற்கு ஊழியர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. மேலும், எங்கள் கடையில் உள்ள பொருள் இதுதான்.
விருப்பம் இருந்தால் பொருட்களை வாங்குங்கள். வேண்டாம் என்றால் பொருட்களை வைத்து விட்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சண்முகம் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைப்பார்த்த கடையில் இருந்த வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் இருவரையும் சமரம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சண்முகம் தகவல் தெரிவித்தார். அதற்கு, அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ட்ரைபுட் உணவு பொருள் பாக்கெட்டில் உயிருடன் பூச்சி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், ஆரணி பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்களில் பெரும்பாலான கடைகளில் மளிகை பொருட்கள், தரமற்ற முறையிலும், காலாவதியான பொருட்களை பாக்கெட்களில் பேக் செய்து விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.