சேலம், ஏப்.13: சேலம் கொண்டலாம்பட்டி அருகே, சூப்பர் மார்க்கெட்டில் மேற்கூரையை பெயர்த்து இறங்கி பணம், துணிகளை திருடிச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் பெரிய சீரகாபாடி பெரியகாடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (47). இவர் அரியானூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த கடையில் ஜவுளி ரகங்களையும் விற்பனை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு, வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு, வீட்டிற்கு சென்றார். நேற்று காலை மீண்டும் வந்து கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, ஆஸ்பெட்டாஷ் சீட் மேற்கூரை உடைந்த நிலையில் காணப்பட்டது. கடையினுள் பார்த்தபோது, மேஜை டிராயரில் இருந்த ₹5 ஆயிரம் பணம் மற்றும் ₹3 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடு போயிருப்பது தெரிந்தது. நள்ளிரவு நேரத்தில் மர்மநபர், மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீசில் கண்ணன் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். தொடர்ந்து, திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூப்பர் மார்க்கெட்டில் பணம், துணிகள் திருட்டு
previous post