ஊட்டி,நவ.22: மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டு முழுவதும் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கடைபிடிக்கப்படும் கோடை சீசனின் போது சுற்றுலா பயணிகள் வருகை பன்மடங்கு அதிகரிக்கும். இதுபோன்ற சமயங்களில் வர கூடிய சுற்றுலா பயணிகள் உதவிடும் வகையில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ‘ஹில் காப்’ என்ற பெயரில் புல்லட் ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு உதவிடுவது மட்டுமின்றி குற்ற சம்பவங்களை தடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி நகரில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்திட வசதியாக டூரிஸ்ட் விங் என்ற ஜீப் ரோந்து வாகன சேவையை காவல்துறை துவக்கி உள்ளது. இந்த வாகனத்தில் ஒரு சப்.இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பணியில் இருப்பார்கள்.
இவர்கள் சுழற்சி முறையில் அடிக்கடி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், தேயிலை பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு வர கூடிய சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் தீர்வு காண்பதுடன், அவசர உதவிகளையும் மேற்கொள்வர். வரும் நாட்களில் பைன் பாரஸ்ட் மற்றும் சூட்டிங் மட்டம் வரை சென்று ரோந்து பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.