சீர்காழி: சீர்காழி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சுக பிரசவத்திற்கு யோகா பயிற்சி நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை, இயற்கை மற்றும் யோகா மருத்துவ பிரிவு சார்பாக, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆணையின் பேரில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர். பத்மநாதன் வழிகாட்டுதலின்படி, 9-வது சர்வதேச யோகா தினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் அருண் ராஜ்குமார் அறிவுரையின்படி இயற்கை மற்றும் யோகா மருத்துவர் மேகலா முன்னிலையில் அருகில் உள்ள அங்கன்வாடியில் கொண்டப்பட்டது. இவ்விழாவில் அங்கன்வாடி பணியாளர் வாசுகி மற்றும் உதவியாளர் கவிதா மூலம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சிறப்பு யோகா பயிற்சியும், கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கான யோகா மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கும் யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் மக்களை தேடி மருத்துவ பிரிவின் சார்பில் புற நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி குறைவதற்கான யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் மருத்துவர் பூபேஷ் தர்மேந்திரா, மருத்துவர் ஜெயக்குமார், இயன்முறை சிகிச்சையாளர் பவானி, செவிலியர் லீனா மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவனை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பயனாளிகளுக்கு சாமை அரிசி ரொட்டி, நவதானிய லட்டு, பயறு பாயாசம் மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது.