புதுடெல்லி; முறையான விசாரணை இல்லாமல் வக்கீலின் டிரைவிங் லைசென்சை சஸ்பெண்ட் செய்தது எப்படி என்று ஆம்ஆத்மி அரசிடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.டெல்லியை சேர்ந்தவர் சூர்யகாந்த் சிங்ளா. வக்கீல். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி இவர் மூல்சந்த் பகுதியில் சென்றபோது சிக்னலில் சிவப்பு விளக்கு போடப்பட்டு இருந்தது. அதில் நிற்காமல் சென்றுவிட்டார். ஆனால் 24ம் தேதி அவரது டிரைவிங் லைசென்ஸ் எந்தவித நோட்டீசும் வழங்கப்படாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதுபற்றி டிசம்பர் மாதம்தான் சூர்யகாந்த் கண்டறிந்தார். உடனே போக்குவரத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ரூ.1000 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து டிசம்பர் 16ம் தேதி அபராதம் செலுத்தினார். ஆனால் ஜனவரி 5ம் தேதி உங்கள் லைசென்ஸை ஏன் நாங்கள் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜனவரி 11ம் தேதி வந்த நோட்டீசில் லைசென்ஸை ஒப்படைக்கும்படி கூறப்பட்டு இருந்தது. மோட்டார் வாகன சட்டப்படி தனது லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. முறையான வழிமுறைகளை பின்பற்றப்படவில்லை என்று அவர் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎன் பட்டேல், நீதிபதி ஜஸ்மித் சிங் தலைமையிலான அமர்வு முன்புவிசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, ஆம்ஆத்மி அரசு, மத்திய, மாநில போக்குவரத்து துறையினர் ஆகியோர் எந்தவித நோட்டீசும் அனுப்பாமல் மனுதாரர் லைசென்ஸை சஸ்பெண்ட் செய்தது ஏன் என்று விளக்கம் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்….