பொன்னமராவதி,ஆக.14: பொன்னமராவதி வட்டாரத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் நந்திக்கு பால், பழங்கள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கோயில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோயிலில் நந்தீஸ்வரருக்குக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு நெய் சாத்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அதுபோல புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதர் கோயில், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயில், அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.