சிவகங்கை, அக்.25: சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா கலெக்டர் ஆஷாஅஜித் முன்னிலையில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.259.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். காளையார்கோவில், கல்லல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.
சொக்கநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட முத்தணங்கோட்டை கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள், செம்பனூர் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் பள்ளிக்கட்டிட மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.28.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிட கட்டுமானப்பணிகள், ஆலங்குடி-கூத்தலூர் இடையே ரூ.61.37 லட்சம் மதிப்பீட்டில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மெட்டல் சாலையின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதுபோல் தேவகோட்டை நகராட்சி பகுதியில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் ரூ.75லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், இணை இயக்குநர் தனபாலன், துணை இயக்குநர் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இருந்தனர்.