சிவகங்கை, மார்ச் 13: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 15ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக் கிழமைகளில்
தனியார்துறை சார்பில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் மார்ச் 15 அன்று காலை 10.30 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் நிறுவனங்கள் பங்கு பெறும் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் வேலை வழங்கும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யலாம்.
பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ படித்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.