சென்னை: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை, தமிழகத்தோடு மீண்டும் இணைக்க போராடிய எல்லை காவலர்களின் இணையற்ற தியாகத்தைப் போற்றி நன்றி செலுத்துவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்திய நாடு விடுதலை பெற்ற பின்பு, 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அவ்வாறு பிரிக்கப்பட்டபோது, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. அவ்வாறு பிரித்த போது, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் ஈடுபட்டு உயிர்நீத்தும், சிறை சென்றும் தியாகம் செய்துள்ளனர்.அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகம் செய்தவர்களை நினைவு கூரும் வகையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக தமிழ்நாடு அரசு அனுசரித்து வருகிறது. இந்நிலையில் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். …