செங்கல்பட்டு, நவ.10: செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அருகேயுள்ள கொடி தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசு. இவரது மகன் பூபதி (30). இவர், செங்கல்பட்டு பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், கடந்த 17-2-2019ம் தேதியன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே ஆட்டோ ஓட்டி வந்தபோது, அதே பகுதியை சேர்ந்து பிளஸ் டூ படிக்கும் 17 வயது சிறுமியை தனது ஆட்டோவில் வருமாறு அழைத்துள்ளார். அப்போது, அச்சிறுமி ‘‘நான் பேருந்தில் வருகிறேன்,’’ என்று கூறியுள்ளார். அதற்கு பூபதி ‘‘நானும் உங்கள் ஊர்தான்’’ என்று கூறி, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். படாளம் அடுத்த சமத்துவபுரம், கொய்யா தோப்பு அருகே, ஆட்டோவை நிறுத்திவிட்டு, அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுசம்பந்தமாக அச்சிறுமியின் உறவினர்கள் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி, பூபதியை கைது செய்த போலீசார் அவர் மீது செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி தமிழரசி பூபதிக்கு ஆயுள் தண்டனையும் ₹15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.