புதுக்கோட்டை, ஏப்.19: புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தில் ஆரோக்கிய சிறுமிகள் குழந்தைகள் இல்லத்தில் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கவிதா ராமு அறிவுறுத்தி உள்ளார். புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தில், ஆரோக்கிய சிறுமிகள் குழந்தைகள் இல்லத்தினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த இல்லத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 25 மாணவிகள் உள்ளனர். இங்கு தங்கும் இடம் வசதி குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் மாணவியர்களிடம் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும் இந்த இல்லத்தில் உள்ள கணினி அறை, நூலகம், சமையலறை உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு, முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் கலெக்டர் கவிதா ராமு ஆய்வு செய்தார். பின்னர் புதுக்கோட்டை நரிமேடு அருகே உள்ள அன்னை சத்தியா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்தினை கலெக்டர் நேரில் பார்வையிட்டு, மாணவியர்களிடம் கல்வி தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும் இந்த காப்பகத்தில் சமையலறை, படுக்கை அறை, தையல் பயிற்சி நடைபெறும் இடம் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த காப்பகத்தில் 28 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும். படுக்கை வசதிகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் கலெக்டர் கவிதா ராமு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தனபால், தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.