வேலூர், டிச.3: வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள சிறுபாசன ஏரிகளுக்கு நீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்கிறது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாலாற்றில் இருந்து பல ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பல ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து உள்ளது. ஏரிகளும் நிரம்பி வருகிறது. நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 ஏரிகளில் இதுவரை 11 ஏரிகள் நிரம்பி உள்ளது. நீர்வரத்து அதிகம் உள்ள ஏரிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் 7 ஒன்றியங்களில் 132 சிறுபாசன ஏரிகள் உள்ளது. அதன்படி அணைக்கட்டு 19, கணியம்பாடி 20, காட்பாடி 41, கே.வி.குப்பம் 16, குடியாத்தம் 17, பேரணாம்பட்டு 10, வேலூர் 9 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் ஒன்றுகூட 100 சதவீதம் நிரம்பவில்லை. எனவே இந்த ஏரிகளின் நீர் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாலாறு, மோர்தானா மூலம் நீர் ஆதாரம் பெறும் ஏரிகளின் கால்வாய்களும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.