சிவகங்கை, பிப். 2: சிறந்த திருநங்கைக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 2024ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி திருநங்கைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருநங்கைகள் நலனுக்காக சேவை புரிந்த திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில், சிறந்த திருநங்கை விருதுகளை தமிழக முதலமைச்சர் வழங்க உள்ளார்.
இவ்விருது ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது. அரசின் உதவி பெறாமல் தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட திருநங்கைகள் மற்றும் திருநங்கைகள் நலனுக்காகசேவை புரிந்து, குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவிபுரிந்த திருநங்கைகள் மற்றும் தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் இவ்விருதுக்கு https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.