தேனி, டிச. 30: தேசிய அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்ள உள்ள தமிழ்நாடு அணியை சேர்ந்த வீராங்கனைகளுக்கு தேனியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவிலான 17 வயதுக்குட்பட்டோருக்கான கபடி போட்டி வருகிற ஜனவரி 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை ராஜஸ்தான் மாநில ம் ஜெய்ப்பூரில் நடக்க உள்ளது. இதில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாநில அணிகள் கலந்து கொள்ள உள்ளன. தமிழ்நாடு மாநில அணிக்கான வீராங்கனைகள் தேர்வு கடந்த மாதம் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் சிறந்து விளங்கும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டன.
இதன்படி, தமிழ்நாடு அணியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் 12 மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மாணவியர் ராஜஸ்தானில் நடக்க உள்ள தேசிய அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள உண்டு, உறைவிட விடுதியில், தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்வாகி உள்ள 12 வீராங்கனைகளுக்கும் கடந்த 27ம் தேதி முதல் இன்று வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கபடி பயிற்றுனர் ராஜேஷ் மற்றும் பாப்ஆனந்தராஜ் ஆகியோர் இவ்வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். தேசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிக்கு மேலாளராக சிஞ்சு செல்ல உள்ளார். இதனையடுத்து, நேற்று தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ள வீராங்கனைகளை கலெக்டர் ஷஜீவனா நேரில் பாராட்டி வாழ்த்தினார். அப்போது தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்திராணி, விளையாட்டு ஆய்வாளர் குபேந்திரன் உடனிருந்தனர்.