கண்டாச்சிபுரம், ஜூன் 10: விழுப்புரம் அருகே சிபிசிஐடி போலீசார் சீல் வைத்துள்ள குண்டலபுலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் பட்டப்பகலில் பைக் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி(45), இவர் நடத்திய விழுப்புரம் அருகே குண்டலபுலியூர் கிராம எல்லையில் அன்புஜோதி ஆசிரமத்தில் பாலியல் தொந்தரவு, அடைத்து வைத்து துன்புறுத்துதல், பலர் மாயமானது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். சிபிசிஐடி போலீசார், ஆசிரமத்தை சீல் வைத்து முக்கிய ஆவணங்கள், லேப்டாப், செல்போன்கள், நகை, பணம் மற்றும் புறா கூண்டு உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் உள்ளிட்ட 8 பேரையும் விழுப்புரம் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் பிற்பகல் ஆசிரமத்தில் இருந்த பைக்கை வாலிபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து குண்டலபுலியூர் விஏஓ மணிபாலன் கொடுத்த புகாரின் பேரில், கெடார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று காலை கெடார் அருகே சூரப்பட்டு பகுதியில் வாகன தணிக்கையின்போது லோடு கேரியர் வாகனத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இரண்டு வாலிபர்கள் பிடிபட்டனர். விசாரணையில் கெடார் அடுத்த பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் (28) மற்றும் உலகலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த முத்து (36) என்பதும் லோடு கேரியர் மூலம் பைக் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கெடார் போலீசார் கைது செய்து லோடு கேரியர் வாகனம், பைக்கை பறிமுதல் செய்தனர்.