பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பல கிராமங்களில் இருக்கும் பயணிகள் நிழற்குடைகள் புதர்மண்டி சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி சுற்றியுள்ள பல கிராமங்களில், பயணிகள் பேருந்துகள் வரும் வரை காத்திருப்பதற்கு நிழற்குடை இன்றி தவித்து வருகின்றனர். பேருந்து நிறுத்தும் இடத்தில் நிழற்குடைகள் இல்லாமல் இருப்பதால், பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் திறந்த வெளியிலே நின்று பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை துவங்கிய நிலையில் பஸ் ஏற வரும் பயணிகள் அவதிப்படுகின்றனர். ஆனால் கிராமங்களின் பல இடங்களில் நிழல்குடைகள் இருந்தும், அதனை முறையான பராமரிப்பு இல்லாமல் பயணிகள் அவதிப்பட வேண்டியுள்ளது.இதில் கோவை ரோடு, பாலக்காடு ரோடு, வடக்கிபாளையம் ரோடு, வால்பாறை ரோடு வழியில் உள்ள கிராமங்களில் ரோட்டருகே உள்ள பயணிகள் நிழல்கூரை பல சிதிலமடைந்து காணப்படுகிறது. பெரும்பாலான நிழற்குடைகளை சுற்றிலும் செடி,கொடி,முட்புதர்கள் வளர்ந்து புதர்மண்டியவாறு உள்ளது. இவ்வாறு உள்ள நிழற்குடைகள் இரவு நேரத்தில் குடிமகன்களின் கூடாரமாக மாறுகிறது. இதனால் அதனை பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிராமப்புறங்களில் உள்ள பயணிகள் நிழல்குடைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….