பரமத்திவேலூர், மே 8: பரமத்திவேலூர் டிஎஸ்பி கலையரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பரமத்திவேலூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், பரமத்தி, நல்லூர், வேலகவுண்டன்பட்டி ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில திருட்டை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வியாபார கடைகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், மற்றும் வீடுகளிலும் கேமரா வைக்க வேண்டும், பல்ல்வேறு வியாபார கடைகளில் வைத்திருக்கும் கேமராக்கள் சாலையில் வருவோர், போவோர் அடையாளம் தெரியும்படி கேமராவை வைக்க வேண்டும்.
பெரும்பாலான கடைகளில் கல்லாப்பெட்டியை நோக்கியே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சாலையில் செல்வோரை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும், பொதுமக்கள் குற்றம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 என்ற போன் நம்பரை பயன்படுத்தவும், குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை விற்பனையை தடுக்கும் வகையில் விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், தகவல் தெரிவித்தவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு டிஎஸ்பி கலையரசன் தெரிவித்துள்ளார்.