Monday, May 20, 2024
Home » சிக்கலில் சிக்கன் தொழில்வெயிலால் கறிக்கோழிகள் இறப்பு சதவீதம் அதிகரிப்பு

சிக்கலில் சிக்கன் தொழில்
வெயிலால் கறிக்கோழிகள் இறப்பு சதவீதம் அதிகரிப்பு

by Karthik Yash

கோவை, ஏப். 20: தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கோவை மாவட்டத்தில் 2,500 கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களிடம் இருந்து தரப்படும் கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகின்றனர். தமிழகத்தில் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் கேரளாவிற்கு மாதம் ஒன்றுக்கு சராசரியாக 2 கோடி கிலோ கோழிகள் அனுப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக, ஆந்திரா மாநிலங்களுக்கும் கறிக்கோழிகள் அனுப்பப்படுகின்றன. தற்போது நிலவி வரும் வெயில் காரணமாக கோழிகளின் இறப்பு சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினமும் 10 லட்சம் கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்கள்தான் தமிழகத்தின் கறிக்கோழிகள் உற்பத்தியில் 75 சதவீதம் பங்கு வகிக்கின்றன. தினமும் 5 லட்சம் கோழிகள் தமிழகம், கேரளா, கார்நாடக ஆகிய மாநிலங்களில் விற்பனை ஆகின்றன. இத்துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தனியார் டிரெடர்ஸ் கறிக்கோழி விற்பனை உரிமையாளர் ரஜேஷ் கூறுகையில், ‘‘குளிர்காலத்தில் கறிக்கோழி வளர்ப்பில் தினமும் 2 முதல் 3 சதவீதம் கோழிகள் இறப்பு ஏற்படும். தற்போது வெயில் காலத்தில் 10 முதல் 12 சதவீதம் வரை இறப்பு ஏற்படுகிறது. மேலும் வெயில் அதிகம் உள்ளதால் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 40 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 30 சதவீதம் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கோழி தீவனங்களின் மூலப்பொருள் விலையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கறிக்கோழி பண்ணை விலை சற்று அதிகரித்துள்ளது.

தற்போது பண்ணை விலை கிலோவிற்கு ரூ.105 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு வாரத்திற்கு 50 லட்சம் கிலோ விற்பனை ஆகும். தற்போது 40 லட்சம் வரை மட்டுமே ஆகிறது. கோடை காலத்தில் இதன் காரணமாக பலரும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது’’ என்றார். கோவை மாவட்டத்தில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், தங்க நகைப்பட்டறைகள், விசைத்தறி, நகைக் தயாரிப்பு போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளது. இதில் பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கு அடுத்தப்படியாக விவசாயம் மற்றும் கால்நடை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அன்னூர், சூலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கறிக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட அன்னூர் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர் சங்க பொருளாளர் சந்திரசேகர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டம் அன்னூர், திருப்பூர் மாவட்டம் அவினாசி, சத்தியமங்கலம், சூலூர் போன்ற பகுதிகளில் மட்டும் 600 பண்ணைகள் உள்ளன. ஒவ்வொரு பண்ணைகளில் இருந்தும் 6 ஆயிரம் கோழிகள் தினமும் கறிக்காக அனுப்பப்படுகின்றன. தற்போது வெயிலின் தாக்கத்தால் பண்ணைகளில் தண்ணீர் ஸ்பிரே மற்றும் காத்தாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக கூடுதல் செலவாகிறது. மேலும் வெயில் காலங்களில் கோழிகளின் எடைகள் குறையும். இது போன்று பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில்தான் தொழில் செய்து வருகிறோம். நெசவாளர்களுக்கு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதுபோல் எங்களுக்கும் இலவச மின்சாரம் வேண்டும். அரசு சலுகைகள், மானியங்கள் போன்றவைகள் தரவேண்டும்’’ என்றார்.

You may also like

Leave a Comment

14 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi