வருசநாடு: வருசநாடு அருகே, மலைக்கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால், போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வருசநாடு அருகே, சிங்கராஜபுரம் ஊராட்சியில் பண்டாரவூத்து மலைகிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த கிராமத்துக்கு தார்ச்சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பால் கறைவைக்காரர்கள், பள்ளி மாணவ, மாணவியர், முதியவர்கள் போக்குவரத்துக்கு சிரமப்படுகின்றனர். டூவீலர் மற்றும் ஆட்டோக்களில் செல்லும்போது, டயர்களை ஜல்லிக்கற்கள் பதம் பார்க்கின்றன. தார்ச்சாலை அமைக்கக்கோரி, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும் பயனில்லை. எனவே, பண்டாரவூத்து மலைக்கிராமத்துக்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சேகர் என்பவர் கூறுகையில், ‘கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லை. ரேஷன் பொருட்கள் வாங்க 3 கி.மீ தூரமுள்ள சிங்கராஜபுரம் கிராமத்திற்கு செல்கிறோம். ஆட்டோவில் செல்ல கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, தேனி மாவட்ட நிர்வாகம் கிராமத்துக்கு தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்….