காரைக்குடி, ஜூலை 28: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் தென்ஜெயராம்பாடி சாரதா நிகேதன் சமிதி டிரஸ்ட் நிறுவனர், ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி, ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்த மகராஜ். இவர் 22ம் தேதி கோவையில் மகாசமாதி அடைந்தார். அருள்மூவரின் திருவடியடைந்த சுவாமிஜிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் சிவசங்கரி ரம்யா வரவேற்றார். அருள் சகோதரி யதீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா அம்பா தலைமை வகித்தார். அருள்சகோதரி யதீஸ்வரி ராமகிருஷ்ணபிரியா அம்பா முன்னிலை வகித்தார்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசுகையில், சுவாமிஜி கல்வி சேவையோடு சமுதாய முன்னேற்ற பணியாற்றி வந்தார்கள். மனிதநேயத்தின் உருவமாக திகழ்ந்தவர். மகளிர் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர். மகளிருக்கு என பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். ஆன்மீக வளர்ச்சியுடன் அறிவு வளர்ச்சிக்கு வித்திட்டவர் சுவாமிஜி என்றார்.நிகழ்ச்சியில் சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன், தேவகோட்டை ஜமீன்தார் சோமநாராயணன் செட்டியார், சூரியநாராயணன் மற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் உள்பட திரளானோர் அஞ்சலி செலுத்தினர். கல்லூரி இயக்குநர் மீனலோச்சனி நன்றி கூறினார்.