சாத்தான்குளம், நவ. 24: முன்னாள் முதல்வர் கலைஞர் நுற்றாண்டையொட்டி நூலகங்களில் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் வாசிப்பு முகாம் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சாத்தான்குளம் ராம கிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகத்தில் வாசிப்பு திறன் முகாம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட நூலகர் ரங்கநாயகி தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். நூலகர் சித்திரைலிங்கம் வரவேற்றார். இதில் அரசின் ஆணைப்படி கலைஞர் நூற்றாண்டு வாசிப்பு திறன் முகாமை சிறப்பாக நடத்திடவும், சாத்தான்குளம், வைகுண்டம், திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் வண்ணம் விளம்பரம் செய்திடவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் நூலகத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால் வசதியை சொந்த செலவில் அமைத்து கொடுத்த வாசகர் வட்ட துணை தலைவர் பொறியாளர் கனகராஜிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் நூலக உதவியாளர் மைக்கேல் ராஜ், வாசகர் வட்ட துணை தலைவர் பொறியாளர் கனகராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ஓய்வுபெற்ற கல்வி அலுவலர் சாமுவேல்ராஜ், ஓய்வுபெற்ற பேரூராட்சி நிர்வாக அலுவலர் ராஜதுரை, வியாபாரிகள் சங்க செயலாளர் மதுரம் செல்வராஜ், ஓய்வுபெற்ற ஆசிரியர் மகாபால்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலகர் இசக்கியம்மாள் நன்றி கூறினார்.