தண்டராம்பட்டு, ஜன.8: கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.85 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் நேற்று சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். பொன்விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. விவசாய பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணையின் நீர் மட்டம் 100 அடியாக குறைந்தது.
இந்நிலையில் சாத்தனூர் அணை சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று மாலை 117.85 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் விடுமுறையான தினமான நேற்று அப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.
மேலும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக சார்பில், சாத்தனூர் அணையில் இருந்து மீன்கள் பிடிக்கப்பட்டது. அதில் 14 கிலோ எடை கொண்ட பெரிய கட்லா மீன் ஒன்று வலையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. அங்கு பிடிக்கப்பட்ட மீன்களை சுற்றுலா பயணிகள் வாங்கி குடும்பத்தினருடன் சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.