சென்னை: தமிழக அரசின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைப்பதற்காக புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும். சென்னைக்கான மூன்றாவது பெருந்திட்டத்தை தயாரிக்கும் உரிய காலமான 2026ம் ஆண்டிற்கு முன்னரே அப்பணி முடிக்கப்படும். சென்னைக்கு அருகில் இருந்த 42 உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். முதலமைச்சர் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, சென்னை மாநகரத்தை ‘சிங்காரச் சென்னையாக’ மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த வகையில், சென்னையில் மாநகர கட்டமைப்பை நவீன சர்வதேச தரத்திற்கு உயர்த்திடும் வகையில், ‘சிங்காரச் சென்னை 2.0’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். வெள்ளநீர் மேலாண்மைக்குழு நகர்ப்புர நிர்வாக திறனை மேம்படுத்துவதற்காகவும், போக்குவரத்து மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் குடிமக்களுக்கு சேவைகளை சிறப்பாக வழங்கவும், ஒரு புதிய மாதிரி திட்டம் உருவாக்கப்படும். வெள்ள கட்டுப்பாட்டு முறைகளை வகுக்கவும், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், வெள்ளநீர் வடிகால்களை வடிவமைக்கவும், சுற்றுச்சூழல், நகர திட்டமிடல், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுநர்களை உள்ளடக்கிய ‘சென்னை பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு’ அமைக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.மதுரவாயல் பறக்கும் சாலை நெடுஞ்சாலை கட்டமைப்புகளின் தரத்தை உயர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். முக்கியமான நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும், அகலப்படுத்தவும், வலுப்படுத்தவும் தேவையான திட்டம் வகுக்கப்படும். அனைத்து முக்கிய நகரங்களுக்கும் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும். கடந்த ஆண்டுகளில், காரணமின்றி நிறுத்திவைக்கப்பட்ட மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்ட சாலை திட்டப் பணிகளை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்….