கடலூர், ஏப். 15: கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம் வடலூரில் கடந்த 10ம் தேதி, ஒரு அமைப்பு சார்பில் வடலூர் தேசிய நெடுஞ்சாலையை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுவதும் தடைப்பட்டது.
மேலும் காவல்துறையின் வேண்டுகோளை ஏற்க மறுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர், எனவே ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தேவையான மற்றும் நியாயமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தது தொடர்பான வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பானது. தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான வீடியோவை கொண்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ செய்தியானது முற்றிலும் தவறானது.
இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள நபர் கிளி ஜோதிடர் அல்ல, வீடியோவில் கூறப்பட்டுள்ளபடி எந்த ஒரு கிளி ஜோதிடர் மீதும் கடலூர் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சமூக வலைதளத்தில் உண்மைக்கு புறம்பான செய்தியை பதிவிடும் சமூக விரோதிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்துள்ளார்.