தாராபுரம், ஜன.9: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஜாமியா சுபஹானியா மதரஸா மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. பெண்கள் விழிப்புணர்வு பட்டிமன்றம், நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா, சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழா, சமய நல்லிணக்க மாநாடு, மற்றும் பரிசளிப்பு விழா என நடைபெற்ற ஐம்பெரும் விழாக்களுக்கு உடுமலைப்பேட்டை பூர்வீக பள்ளிவாசலின் தலைமை இமாம் சையது ஈசா தலைமை வகித்தார். கரையூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் இமாம் கலீல் ரகுமான் வரவேற்று பேசினார்.
முன்னதாக அலங்கியம் ஜாமியா அகமதில்லாஹ் பாட சாலையின் பேராசிரியை அனீஸ் பாத்திமா தலைமையில் விழிப்புணர்வு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளை வழி நடத்திய அலி பாக்கள் பெயரிலும், புகழ்பெற்ற இமாம்களின் பெயரிலும் இஸ்லாமிய மார்க்க பெரியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு சமூக ஆர்வலர்களுக்கான விருதுகளை வழங்கினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் தாராபுரம் நகர கழக செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பாபு கண்ணன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், ஊராட்சி ஒன்றிய தலைவர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, அதிமுக நகரக் கழக செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் தென்னரசு உட்பட பலர் கலந்து கொணடனர்.