சேலம், மே 24: விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாரய இறப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக போலீசார் மாநிலம் முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதேபோல் சந்துக்கடைகளில் மதுவிற்போரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதன்படி சேலம் மாநகர பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் மாநகரில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை வாங்கி சந்து கடை மூலமாக கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் சேலம் மாநகரில் சந்துகடைகளில் மது விற்றதாக 15 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து இந்த சோதனை நடக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.