சத்தியமங்கலம் : சத்தியில் போலீசார் சோதனையில், ஜீப்பில் தக்காளி லோடில் மறைத்து கடத்திய மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை அதிரடியாக கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், பண்ணாரி சோதனைச்சாவடியில், சத்தியமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆசனூர் மலை பகுதியில் இருந்து வந்த தக்காளி பாரம் ஏற்றிய ஜீப்பை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வேன் ஓட்டுனர் திடீரென வேனில் இருந்து இறங்கி ஓடி வனபகுதிக்குள் தலைமறைவானார். இதையடுத்து, சந்தேகம் வலுத்ததால், சோதனை நடத்தியதில் தக்காளி கூடைகளுக்கு இடையே கர்நாடக மாநில மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தலா 1 லிட்டர் அளவு கொண்ட 20 பிராந்தி பாட்டில்களையும், ஜீப்பையும் பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜீப் ஓட்டுனர் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, காளிபாளையத்தை சேர்ந்த விவேக் (24) என்பதும், ஜீப் உரிமையாளர் சொட்டகவுண்டம்பாளையம் மோகனசுந்தரம் என்பதும் தெரியவந்தது. இதற்கிடையில் தப்பி ஓடிய வேன் ஓட்டுனர் விவேக்கை சத்தியமங்கலம் எஸ்ஆர்டி கார்னர் அருகே பஸ் ஸ்டாப்பில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, ஜீப் உரிமையாளர் மோகனசுந்தரம் மீதும் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….