சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழை காலத்திற்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, கரடி, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து கண்டறிவதற்காக ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி மழைக் காலத்திற்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட 10 வனச்சரகங்களில் இன்று தொடங்கியது. 300-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் 76 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜிபிஎஸ் கருவி, தொலைநோக்கி, காம்பஸ் உள்ளிட்ட அதிநவீன கருவிகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பவானிசாகர் வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணியின்போது புலியின் கால்தடம் கண்டறியப்பட்டது. இன்று தொடங்கி 6 நாட்களுக்கு கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு பின்னர் அதன் விபரங்கள் சென்னை தலைமை உயிரின வனப்பாதுகாவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….