சென்னை: சட்டத்திற்கு உட்பட்டே அனைத்து சிகிச்சைகளையும் வழங்குகிறோம். நாங்கள் விதி மீறுவதாக நோட்டீஸ் அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என்று இந்திய சித்த மருத்துவ பட்டாதாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் செல்வின் இன்னசென்ட் தாஸ் கூறியதாவது: மத்திய இந்திய முறை மருத்துவ கவுன்சில் சட்டம், தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் சட்டம், மருத்துவமனை பதிவு சட்டத்தின்படி எங்களுக்கு அனுமதித்துள்ள சிகிச்சைகளை தான் மக்களுக்கு வழங்குகிறோம். எங்களது சட்டத்திற்கு உட்பட்டே அனைத்து சிகிச்சைகளையும் வழங்குகிறோம். நாங்கள் விதி மீறுவதாக நோட்டீஸ் அனுப்புவது ஏற்புடையதாக இல்லை. இதுகுறித்து இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதித்துறை இயக்குனரிடம் மனு அளித்துள்ளோம். அவரும் எங்களது கோரிக்கை குறித்து மருத்துவ சேவை பணிகள் இயக்குனரிடம் ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் பதிவாளராக பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியில் நிரந்தர அதிகாரியை நியமிக்க வேண்டும். சித்த மருத்துவர்கள் மீதான புகார்களை ஆய்வு செய்ய சித்த மருத்துவத்துறை உயர் அதிகாரி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….