சங்கரன்கோவில்,டிச.22: சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர் தொகுதிக்குடபட்ட பகுதிகளில் மழை பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தென்காசி கலெக்டர் துரை ரவிச்சந்திரனுக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து மனு அளித்தார். இது குறித்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பெய்த பெருமழையின் காரணமாக விவசாய நிலங்களில் சாகுபடி செய்த நெற்பயிர்கள், புஞ்சை நிலங்களில் சாகுபடி செய்து அறுவடைக்கு வரும் நிலையில் உள்ள இறவை மற்றும் மானாவாரி பயிர்கள் அனைத்தும் நஷ்டமாகிவிட்டது. கால்நடைகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்றுநோய் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மழைநீர் பெருவாரியாக வெளியேறியதால், அதிக இடங்களில் சாலைகள் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டு, மிகவும் நெருக்கடியான சூழ்நிலை உள்ளது. எனவே இந்த மழை பாதிப்பால் ஏற்பட்ட விவசாயி, கால்நடை வைத்து பிழைப்பு நடத்தி வரும் சாதாரண மக்களின் கஷ்டங்களை போக்கவும், சாலை வசதி, குடிநீர் சீராக கிடைக்கவும் உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதியில் மழை பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை
previous post