கோவை: கோவை அருகே யோகா பயிற்சிக்கு சென்று மாயமான பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். திருப்பூரை சேர்ந்த சுபஸ்ரீ (34) கடந்த மாதம் 11ம் தேதி கோவைக்கு 7 நாட்கள் யோகா பயிற்சிக்கு வந்துள்ளார். சில நாட்கள் கழித்து யோகா மையம் அருகே உள்ள சாலையில் அவர் ஓடுவதுபோல் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. யோகா பயிற்சிக்கு சென்ற தனது மனைவி வீடு திரும்பாதது குறித்து அவரது கணவர் பழனிக்குமார் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், 6 தனிப்படைகள் அமைத்து மாயமான சுபஸ்ரீயை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கோவை ஆலாந்துறை அடுத்த செம்மேடு அருகே ஒரு தோட்டத்து கிணற்றில் மிதந்த பெண் சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண், பூண்டி அருகே உள்ள யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து மாயமான சுபஸ்ரீயாக இருக்கலாம் என போலீசார் சந்தேகத்தினர். அதன் அடிப்படையில் ஆலாந்துறை போலீசார் அவரது குடும்பத்திற்கு தெரிவித்தனர். உடனடியாக திருப்பூரில் இருந்து கோவை வந்த குடும்பத்தினர் சடலத்தை அடையாளம் பார்த்து சுபஸ்ரீதான் என கையில் இருந்த மோதிரம் மற்றும் உடையை வைத்து அடையாளம் காட்டினர். சுபஸ்ரீயும் அவரது கணவர் பழனிக்குமாரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். கோவையில் யோகா பயிற்சிக்கு வந்த சுபஸ்ரீ பிணமாக மீட்கப்பட்டது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். யோகா மையத்தில் பயிற்சி பெற வந்து மாயமான பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….
கோவை அருகே யோகா பயிற்சிக்கு சென்று மாயமான பெண் சடலமாக கிணற்றில் மீட்பு
previous post