Thursday, May 16, 2024
Home » கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில்பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில்
பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்

by Karthik Yash

கோவில்பட்டி, ஏப்.14: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 9வது நாள் திருவிழாவான நேற்று காலையில் கோவில்பட்டி கம்மவார் சங்கம் சார்பில் 48வது ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.

இதையொட்டி அதிகாலை காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜை, 6 மணிக்கு சிறப்பு பூஜை, 7 மணிக்கு ரதோகனம் பூஜை ஆகியவை நடந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கோவில்பட்டியில் உள்ள கம்மவார் கல்யாண மண்டபம் முன்பிருந்து தேர்வடம் மேளதாளம் முழங்க கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதன்பிறகு காலை 9.30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. கம்மவார் சங்க தலைவர் ஹரிபாலகன் தலைமை வகித்தார். செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர் பொன்ராஜ், துணைத்தலைவர்கள் பட்டுராஜன், ஜெனரேஷ், இணைச் செயலாளர்கள் லட்சுமணன், செந்தில்குமார், துணைச்செயலாளர்கள் மாரிச்சாமி, அய்யலுசாமி, சட்ட ஆலோசகர்கள் பால்ராஜ், ரெங்கநாயகலு, முன்னாள் தலைவர்கள் சீனிவாசன், துரைராஜ், கனகராஜ், வெங்கடேசன் சென்னகேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ, தேரினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், மதிமுக துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ராஜகுரு, முன்னாள் உறுப்பினர் திருப்பதிராஜா, பி.எஸ்.ஆர்.கல்வி குழுமம் தாளாளர் சோலைச்சாமி மற்றும் கம்மவார் சங்க மண்டகபடிதாரர்கள் பங்கேற்றனர்.

முதலாவதாக சுவாமி தேரும், அடுத்து அம்பாள் தேரும் புறப்பட்டது. இருதேர்களும் நான்கு ரதவீதிகளில் பக்தர்கள் சரண கோஷத்துடன் வாணவேடிக்கை முழங்க வலம் வந்து, நிலையை சென்றடைந்தது. பூஜைகளை செண்பகராமபட்டர், சுவாமிநாதபட்டர், கோபாலகிருஷ்ணபட்டர், சங்கர் பட்டர், ரகு பட்டர் ஆகியோர் நடத்தினர். நிகழ்ச்சியில் கே.ஆர். கல்விக் குழும நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாசலம், கம்மவார் சங்க முன்னாள் துணைத்தலைவர் ராமச்சந்திரன், கோயில் தலைமை எழுத்தாளர் மாரியப்பன், முன்னாள் அறங்காவல் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகாரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ், தமாகா நகர தலைவர் ராஜகோபால் மற்றும் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து இரவு 7 மணிக்கு யானை, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும், 8 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடந்தது. 10வது நாளான இன்று (14ம்தேதி) ஆயிரவைசிய காசுக்கார செட்டிப்பிள்ளைகள் சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி திருவிழாவும், நிறைவு நாளான 15ம்தேதி நாடார் உறவின்முறை சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் இரவு 7 மணிக்கு கோயில் அருகேயுள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழாவும், 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi