கோவில்பட்டி : முழு ஊரடங்கின் போது கோவில்பட்டி, கயத்தாறில் சாலைகளில் தேவையின்றி வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.முழு ஊரடங்கின்போது, கோவில்பட்டி நகரப்பகுதியில் ஏராளமானோர் பைக்குகளில் காரணமின்றி வெளியே சென்று வருகின்றனர். இதையடுத்து சுகாதாரத்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில், சாலைகளில் காரணமின்றி வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.நேற்று முன்தினம் கோவில்பட்டி பிரதான சாலையில் முகாம் அமைக்கப்பட்டது. அந்த வழியாக சென்றவர்களை காவல்துறையினர் விசாரித்து, எந்தவித காரணமும் இன்றி வந்த 252 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் மறித்து, பரிசோதனைக்கு உட்படுத்துவது தெரிந்த பலர், பிரதான சாலையை தவிர்த்து, ஏ.கே.எஸ். தியேட்டர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் வழியாக வேகமாக சென்றனர்.இதன் தொடர்ச்சியாக நேற்று அரசு மருத்துவமனை எதிரே உள்ள கடலையூர் சாலையில் முகாம் அமைத்தனர். இங்கு, மருத்துவர் மனோஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர், ஆண்கள், பெண்கள் என 160 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், மீண்டும் காரணமின்றி வெளியே வரக்கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.மேலும், மாலை, இரவு நேரங்களில் டி.எஸ்.பி. கலைக்கதிரவன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் சபாபதி, தங்கராஜ் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசிய தேவைகளின்றி வருவோரின் பைக்குகள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்கயத்தாறு: கயத்தாறிலும் காரணமின்றி சாலைகளில் சுற்றித்திரிபவர்களுக்கு காவல்துறையினர் கொரானா பரிசோதனை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி கயத்தாறின் முக்கிய பகுதிகளான மதுரை மெயின் ரோடு, கீழ பஜாரிலுள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு மற்றும் வடக்கு தெரு, தெற்கு தெரு, மேலத்தெரு ஆகிய இடங்களிலும், சாலைகளிலும் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சுற்றித்திரிந்தவர்களை காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து பிடித்து அவர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்தனர். காலை முதல் மதியம் வரை சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதே போன்று தினந்தோறும் கயத்தாறு பேரூராட்சியின் முக்கிய சாலைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொரானோ பரிசோதனை நிகழ்ச்சி கயத்தாறு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில், உதவி ஆய்வாலர்கள் அரிக்கண்ணன், பால் ஏற்பாட்டில் நடந்தது. தலைமை காவலர் செல்லப்பாண்டியன், காவலர்கள் மோகன், பாலகிருஷ்ணன், சுடலைமணி, பாலமுருகன், சதீஷ்குமார், செல்லத்துரை மற்றும் கயத்தாறு ஆரம்ப சுகாதார பணியாளர்கள் இந்த பரிசோதனையில் பணியாற்றினர்….
கோவில்பட்டி, கயத்தாறில் தேவையின்றி சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை-காவல் துறையினர் அதிரடி
previous post