திருப்பூர், நவ. 24:திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னப்புத்தூர் மற்றும் கோவிந்தாபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மக்காச்சோளம் செயல்விளக்க திடல்களை, வேளாண்மை துணை இயக்குனர் சுருளியப்பன், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்க மாவட்ட ஆலோசகர் அரசப்பன், தாராபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் லீலாவதி ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். மேலும், வரப்பாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது: ஒன்றிய அரசு நிதி உதவியுடன் மக்காச்சோளம் சாகுபடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விவசாயிகளிடையே விளைச்சலை பெருக்கவும் தானியங்கள் திட்டத்தினை வேளாண்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் புதிய வீரிய ஒட்டுரக விதைகள் வினியோக மானியம், செயல்விளக்க திடல்கள் அமைத்தல், உயிரியல் காரணிகள் வினியோகம் ஆகிய இனங்களில் மானிய உதவி வழங்கி விளைச்சலை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.