Thursday, May 23, 2024
Home » கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறியதில் பெண்கள் உட்பட 25 பேர் காயம்: எம்எல்ஏ ஆறுதல்

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறியதில் பெண்கள் உட்பட 25 பேர் காயம்: எம்எல்ஏ ஆறுதல்

by Ranjith

 

பொன்னேரி, அக். 23: மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் பகுதியில் வேணுகோபால் சுவாமி கோயில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் 5ம் வார திருவிழா சனிக்கிழமையான நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக ஊரில் உள்ள தெருக்களில் பக்தர்கள் சாமி ஊர்வலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, குளக்கரை பகுதியில் வாணவேடிக்கை மற்றும் பட்டாசு வெடிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 4மணியளவில் சாமி கோயிலுக்கு முன் வந்து நிறுத்தப்பட்டது.

இந்நேரத்தில், அங்கு, ஊர்வலத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடி இருக்கும் இடத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள் திடீரென, வெடித்து சிதறியது. அதனால் ஏற்பட்ட நெருப்பு பொறி, அங்கிருந்த பக்தர்கள் மீது விழுந்தது. இதில் பயந்துபோன பக்தர்கள் நாளாபுறமும் ஓடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓடும்போது, ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக, 108 அம்புலன்ஸ் தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே மூன்று அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காலை 5 மணிக்கு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, தலைமை மருத்துவர் முகமது அசேன் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக காலை 6.30 மணிக்கு மூன்று அம்புலன்ஸ் மூலம் சதீஷ்(16), கோகுல்(16), சுரேஷ்(34), எழிலரசன்(18) பொன்மலை செல்வன்(37) சாமுண்டீஸ்வரி(20), பிரபாவதி(17) ஆகியோர் என இதில், இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள், 30 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடதக்கது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேற்று மதியம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களை அழைத்து உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். மீஞ்சூர் திமுக முன்னாள் நகர் செயலாளர் மோகன்ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

You may also like

Leave a Comment

12 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi