பல்லடம், டிச.31: கோயில்களுக்கு இரவு காவலாளிகள் பணி நியமனம் செய்ய பூசாரிகள் நல சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலுள்ள பெரும்பாலான கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் இரவு நேர காவலாளிகளாகவும் வேலை பார்த்து வருகின்றனர். கோயில்களில் இரவு காவல் பணிக்கு தகுதி திறமை வாய்ந்த காவலாளிகளை நியமிக்க வேண்டும். செலவை குறைக்கும் நோக்கில், சில கோவில்களில் இதுபோன்ற அவலம் நிலவுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு திருப்பூரில் கோயில் பூசாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தும் கோயில்களில் இரவு காவல் பணிக்கு காவலாளிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, கூடுதல் பொறுப்பாக காவலாளிகளாக வேலை வழங்குவதை கோவில் நிர்வாகங்கள் தவிர்க்க வேண்டும். கோயில்களில் காவலாளிகளை நியமிப்பதுடன், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.