நாகர்கோவில், அக்.4 : கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கோதநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள சில கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததன் அடிப்படையில், பழுதடைந்த கட்டிடங்களை சீரமைப்பதற்காக ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்த அலுவல் நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டதும் சீரமைப்பு பணிகள் உடனடியாக துவங்கப்படும். மேலும் கோதநல்லூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளிகள் பிரிவு கட்டடம் பழுதடைந்த நிலையில், அதன் பராமரிப்பிற்கு ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் மேற்கொள்ள தயாராக உள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக தற்காலிகமாக அதே வளாகத்தின் வேறொரு கட்டிடத்தில் புறநோயாளிகள் பிரிவு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்ட பொதுப்பணித்துறை மூலம் மதிப்பீடு பெற்று உரிய நிதி அனுமதி பெற அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. இவ்வாறு மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.