சேலம், மே 22:சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் அழகிரிநாதர் பெருமாள், தாயாருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டி, கோட்டை அழகிரிநாதர் பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வரும் 25ம் தேதி, வைகாசி விசாக தேரோட்ட திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து தினசரி உற்சவர்கள் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.
இக்கோயிலில் தனியார் குழு சார்பில், சந்தன காப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் உள்ளிட்ட உற்சவர்களுக்கு பால், இளநீர், பன்னீர், திருமஞ்சனம், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருமாள், தாயார்களுக்கு சந்தனக்காப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.