காரைக்கால்,பிப்.9: காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் கோட்டுச்சேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் குமரன் மேற்பார்வையில் போலீசார் காரைக்கால் அடுத்த நண்டலாறு எல்லை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து பொறையார் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் பதிலளித்தால் தொடர் விசாரணையில் சந்தேகப்பட்ட நபர் பைக்கை திருடி கொண்டு வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் விசாரணையில் பைக் திருட்டில் ஈடுபட்டவர் மயிலாடுதுறை மாவட்டம் தேரெழுந்தூர் வடக்கு ஆரிய தெரு பகுதியை சேர்ந்த இளையராஜா (24) என்பது தெரிய வந்தது.பின்னர் இளையராஜாவை கைது செய்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நபர் மீது அதே போல் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.