ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 27: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஏற்கனவே பயிரிடப்பட்டிருந்த பருத்தி உள்ளிட்ட விவசாயம் பசுமை அடைந்துள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கீழக்கோட்டை, பிச்சனா கோட்டை, இருதயாபுரம், ஆவரேந்தல், பாரனூர், ஊரணங்குடி,செங்குடி, பூலாங்குடி, வாணியக்குடி, சவேரியார்பட்டிணம், புல்ல மடை, செங்க மடை, இரட்டையூரணி, நெடும் புலிக்கோட்டை, பொட்டக்கோட்டை, அழகர் தேவன்கோட்டை, ரெகுநாத மடை உள்ளிட்ட கிராமங்களில் நெல் விவசாயம் அறுவடை செய்த பின்னர் இரண்டாம் போக சாகுபடியாக விவசாயிகள் தங்களின் நிலங்களில் பருத்தி எள்ளு, உழுந்து உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். இவை நன்கு வளர்ந்து வரக்கூடி நேரத்தில் கோடைவெயில் அதிகமாக இருந்ததால் தண்ணீர் பாசன வசதியில்லாத வயல்களில் இருந்த செடிகள் சோர்வடைந்து வாடி கருகி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கோடை மழையால் சில கிராமங்களில் வாடி வந்த பருத்தி, எள்ளு செடிகள் உள்ளிட்டவை மீண்டும் உயிர்தெழுந்து பசுமையடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை மழையால் பசுமையான பருத்தி செடிகள்
previous post