தா.பழூர். ஏப்.10: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் கொள்ளிடம் கரையோரம் தைலம் மர காடுகள் இருந்து வருகிறது. இந்த தைல மரத்தோப்பில் திடிரென தீ பற்றி எரிந்தது. இதனை பாலத்தின் மீது பயணம் செய்தவர்கள் கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மள,மளவென கொழுந்து விட்டு எரிய துவங்கியது.
தகவல் அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் தீ மேலும் பரவாமல் இருக்க அருகில் உள்ள மண் மற்றும் நீரைக் கொண்டு தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இதனால் மர தோப்புகள் முற்றிலும் எரியாமல் பாதுகாக்கப்பட்டது இந்த தீ விபத்தால் பெரும் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த தீ எப்படி பற்றியது என்பது குறித்து தா.பழூர் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீயை அணைத்து தீ பரவாமல் கட்டுப்படுத்தியவர்களை பலரும் பாராட்டினர்.