கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளூர் கிராமத்தில் 8 ஆண்டுகளுக்கு முன் கால்நடை பட்டி கட்டப்பட்டது. ஆனால் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. சில ஊராட்சிகளில் அரசு சார்பில் கால்நடை பட்டி திறக்கப்பட்டு ஊராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் சுற்றி திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைத்து அதற்கு தேவையான உணவு, தண்ணீர் வழங்கி பராமரித்து பின்னர் கால்நடை உரிமையாளர்கள் மீட்க வரும்போது அவர்களிடமிருந்து ஊராட்சி சார்பில் உரிய கட்டணம் வசூலிக்கப்பட்டு ஒப்படைக்கப்படுவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சியில் மாதிரவேளூர் கிராமத்தில் புதிதாக கால்நடை பட்டி கட்டப்பட்டு எந்த பயனுமின்றி 8 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இந்த கால்நடை பட்டி இதுவரை ஊராட்சியிடம் ஒப்படைக்கவில்லை. எனவே கால்நடை பட்டி கட்டிடத்தை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும், இதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வத்திடம் கிராம மக்கள் மனுவும் அளித்தனர். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்….