திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, நிலக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம், சில்லரை விலைக்கே மொத்தமாக பால் கொள்முதல் செய்து பணம் தருவதாக கூறி, பொள்ளாச்சியை சேர்ந்த கோக்கோ லேண்ட் டயரி பார்ம் நிறுவனத்தினர் ரூ.50 லட்சத்திற்கு மேலாக மோசடி செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் சிவசண்முகம் பிரதாபன், மேலாளர் செல்வக்குமார், கணக்காளர் சத்யராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று பாதிக்கப்பட்டவர்கள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் விசாகனிடம் மனு அளித்தனர்.இதுகுறித்து நிலக்கோட்டையை சேர்ந்த சரவணகுமார் கூறுகையில், சிவசண்முக பிரதாபனிடம் எனக்கு சேர வேண்டிய ரூ.4 லட்சத்தை கேட்டபோது, ‘‘நீ போலீசுக்கு போனால் என்னிடமிருந்து ஒரு பைசா கூட பெற முடியாது. மீறி செய்தால் நான் அரசியல் செல்வாக்கு மிக்கவன். உன்னை அடியாட்களை வைத்து காலி செய்து விடுவேன்’’ என கொலை மிரட்டல் விடுகிறார். என்னை போலவே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பால் விவசாயிகள் பலரிடம் ரூ.50 லட்சத்துக்கும் மேலாக மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. எனவே அவர்கள் மீதுசட்டப்படி நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார். அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் மருமகன்தான் சிவசண்முக பிரதாபன் என்பது குறிப்பிடத்தக்கது….